அமெரிக்காவின் அலஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்தனர்
வாஷிங்டன்,
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்தனர். இந்திய நேரப்படி அதிகாலை 3.58 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அலஸ்கா மாகாணம் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படக்கூடிய ரிங் ஆப் பயர் என்ற இடத்தில் அமைந்து உள்ளது. இதனால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ரிக்டர் 7.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனினும், சமீப காலமாக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது மக்களை பீதி அடையவைத்து இருக்கிறது. கடந்த 1964 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 9.2 என்ற அளவுக்கு நிலநடுக்கம் அலஸ்காவில் ஏற்பட்டது. அமெரிக்க வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இது அமைந்தது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அலஸ்காவின் வளைகுடா மற்றும் ஹவாய், அமெரிக்க மேற்கு கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கியது.






