

டோக்கியோ
ஜப்பானின் வடகிழக்கே இவாதே மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் பசிபிக் பெருங்கடலில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும், கடலில் 10 அடி உயரத்திற்கு (3 மீட்டர் உயரம்) அலைகள் எழும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இவாதே மாகாணத்தின் ஹொக்கைடோ நகரின் பல பகுதிகளில் சுனாமி தாக்கம் இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றது. எனினும், ஹொக்கைடோ அணுமின் நிலையத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழவில்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, நிலநடுக்கம் தொடர்ச்சியாக, தலைநகர் டோக்கியோவில் இருந்து ஆமோரி நகருக்கான புல்லட் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், வடக்கு கடலோர பகுதிக்கு உடனடியாக சுனாமி அலைகள் வந்தடையும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. அதனால், கடலோர பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கப்பட்டு உள்ளது.
சுனாமி அலையின் பாதிப்புகள் தொடர்ச்சியாக இருக்க கூடும் என்றும், எச்சரிக்கை வாபஸ் பெறப்படும் வரை பாதுகாப்பான பகுதிகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.