மொழிப்பிரச்சினையால் குளறுபடி... பரிசோதனைக்கு வந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவமனை

தவறான சிகிச்சைக்கு காரணமான ஊழியர்களை மருத்துவமனை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
மொழிப்பிரச்சினையால் குளறுபடி... பரிசோதனைக்கு வந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவமனை
Published on

செக் குடியரசின் பிராக் நகரில் உள்ள புலோவ்கா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு, வெளிநாட்டைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பரிசோனைக்காக வந்துள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த பணியாளரிடம் தனக்கான பரிசோதனை குறித்து கூறியிருக்கிறார்.

ஆனால், அவர் பேசிய மொழியை சரியாக புரிந்துகொள்ளாத மருத்துவமனை ஊழியர்கள், அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யவேண்டும் என தவறாக நினைத்து அதற்கான வார்டுக்கு அனுப்பி உள்ளனர். அங்கு ஏற்கனவே வேறு பெண்ணுக்கு கருக்கலைப்புக்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர். அந்த வார்டில் உள்ளவர்களும் சரியாக விசாரித்து உறுதி செய்யாமல் ஆரோக்கியமாக இருந்த அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளனர். கடந்த மாதம் 25-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர் மற்றும் மயக்க மருந்து நிபுணர் என அனைவரும் அந்த பெண்ணை சரியாக அடையாளம் காணத் தவறிவிட்டனர். நடந்த தவறுக்கு மொழித்தடையுடன் அலட்சியமும் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தவறான சிகிச்சைக்கு காரணமான ஊழியர்களை மருத்துவமனை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com