மாலி நாட்டில் அதிபர், பிரதமர் கைது: ராணுவம் அதிரடி நடவடிக்கை

மாலி நாட்டில் அதிபர் மற்றும் பிரதமரை கைது செய்து அந்நாட்டு ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.
மாலி நாட்டில் அதிபர், பிரதமர் கைது: ராணுவம் அதிரடி நடவடிக்கை
Published on

பமேகோ,

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டில் ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையால் அதிபர் இப்ராகிம் பவுபாக்கர் கெய்ட்டா பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அந்நாட்டின் அதிபராக பா டாவ் இருந்து வருகிறார். பிரதமராக மொக்தார் உவானே பதவி வகிக்கிறார்.

இந்நிலையில், அமைச்சரவை சீரமைப்பு நேற்று (திங்கட் கிழமை) நடந்தது. இதில், ராணுவ அமைப்பில் இருந்த 2 உறுப்பினர்கள் மாற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து அதிரடி நடவடிக்கையாக அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் அதிபரை கைது செய்தனர். இதேபோன்று பிரதமர் மற்றும் ராணுவ மந்திரியான சொலேமான் டவ்கோர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இதனால், அந்நாட்டில் பதற்ற நிலை காணப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிமக்கள் ஆட்சியை கொண்டு வர தற்காலிக அரசு முயற்சி செய்து வருகிறது. எனினும், முக்கிய பதவிகளை ராணுவம் கைப்பற்றி அதிகாரத்தில் இருந்து வருவது ஆளும் அரசுக்கு இடையூறாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com