குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாடுகளுக்கான சுற்று பயணத்தினை தொடங்கினார்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சைப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு ஆகிய 3 நாடுகளுக்கான சுற்று பயணத்தினை இன்று தொடங்கினார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாடுகளுக்கான சுற்று பயணத்தினை தொடங்கினார்
Published on

புதுடெல்லி,

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சைப்ரஸ், பல்கேரியா மற்றும் செக் குடியரசு ஆகிய 3 நாடுகளில் சுற்று பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

இந்த பயணத்தில் அவர் 3 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பொருளாதார அடிப்படையிலான விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதன்படி சைப்ரஸ் நாட்டிற்கு (செப்டம்பர் 2 முதல் 4 வரை) இன்று செல்லும் அவர் அந்நாட்டு அதிபர் நிகோசை சந்தித்து இருதரப்பு வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்துகிறார். 3 நாட்கள் சுற்று பயணத்திற்கு பின்னர் அவர் (செப்டம்பர் 4 முதல் 6 வரை) பல்கேரியா செல்கிறார்.

இது கடந்த 2003ம் ஆண்டு குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாம் பல்கேரியாவுக்கு சென்ற பின்னர் ராம்நாத் மேற்கொள்ளும் முதல் அதிபர் பயணம் ஆகும்.

இதனை தொடர்ந்து அவர் செக் குடியரசில் தனது சுற்று பயணத்தினை நிறைவு செய்கிறார். அங்கு அதிபர் மிலோஸ், பிரதமர் ஆண்டிரெஜ் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதனை தொடர்ந்து வர்த்தக கூட்டம் ஒன்றிலும் அவர் கலந்து கொள்கிறார். இதில் 60 இந்திய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதே அளவிலான செக் குடியரசின் நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன.

இந்த 3 நாடுகளின் சுற்று பயணத்தில் வர்த்தகம் பற்றிய பேச்சுவார்த்தைகள் முக்கிய இடம்பெறும் என குடியரசு தலைவரின் பத்திரிகை செயலாளர் அசோக் மாலிக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com