

ஈரான்–அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் இன்று 33-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் ஈரான் முழுவதும் அமெரிக்கா–இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது.
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா ஒருபக்கம் அமைதி பேச்சுவார்த்தையுடன் கூடிய தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. மறுபக்கம், ஈரானின் முக்கிய நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் தாறுமாறாக தாக்கி வருகிறது.
ஈரான் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருவதாக சொல்லப்பட்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கவும் ஈரான் தயாராகி வருகிறது. இந்த நிலையில், ஈரான் போர் விவகாரத்தில் முக்கிய அறிவிப்பை டிரம்ப் வெளியிடுவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம் எதுவும் ஏற்படாமலே ஈரானை விட்டு அமெரிக்கா வெளியேற உள்ளதா? அல்லது ஈரான் மீது கடுமையான தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதா? என்பது பற்றி டிரம்ப் நாளை அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஈரானில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெளியேறுவோம் என்று டிரம்ப் கூறியிருந்தார்