

வாஷிங்டன்,
இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்தில் பத்திரிகையாளர் கசோக்கி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாக விசாரணையில் இறங்கி உள்ளது. சி.ஐ.ஏ. இயக்குனர் அங்கு விரைந்தார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), துருக்கியில் உள்ள இஸ்தான்புல் சவுதி அரேபிய தூதரகத்துக்கு கடந்த 2-ந் தேதி சென்றார். அவர் அங்கிருந்து திரும்பவில்லை. அவர் காணாமல் போய் 17 நாட்களுக்கு பிறகு அவர் கொல்லப்பட்டு விட்டதாக சவுதி அரேபியா ஒப்புக்கொண்டது.
சவுதி அரேபிய மன்னராட்சியையும், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கசோக்கி கொல்லப்பட்டது உலகை உலுக்கி உள்ளது. இதில் வெளிப்படையான, நம்பத்தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
முதலில் ஜமால் கசோக்கி படுகொலையில் சவுதி அரேபியாவின் தகவலை ஏற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். இப்போது இதில் பல்டியடித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் தகவல்கள் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று அவர் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசுகையில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி கசோக்கி படுகொலையில் சதி உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.
இது தொடர்பான ஒரு கேள்விக்கு டிரம்ப் பதில் அளிக்கையில், கசோக்கி படுகொலையில் நடந்தது என்ன என்பது நமக்கு விரைவில் தெரிய வரும். நாம் நம்மிடம் அபார திறமை படைத்தவர்களை கொண்டுள்ளோம். அவர்கள் விசாரணை நடத்திக்கொண்டு வருவார்கள் என்று கூறினார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, கசோக்கி கொலையில் தனக்கோ, மன்னருக்கோ தொடர்பு இல்லை என்று சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் என்னிடம் தெரிவித்தார். அவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டால், அதில் நான் மிகவும் வருத்தம் அடைய நேரிடும். பொறுத்திருந்து பார்ப்போம் என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையே கசோக்கி படுகொலை தொடர்பான விசாரணையில் அமெரிக்கா நேரடியாக துருக்கியில் களம் இறங்குகிறது. அமெரிக்க மத்திய புலனாய்வு படை சி.ஐ.ஏ.யின். இயக்குனர் ஜினா காஸ்பெல் துருக்கி விரைந்தார்.
அவர் நேரடியாக விசாரணை நடத்தி ஜனாதிபதி டிரம்பிடம் அறிக்கை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிக்கையில் அவர் கசோக்கி படுகொலையின் பின்னணியை அம்பலப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் துருக்கி நாடாளுமன்றத்தில் அதிபர் எர்டோகன் நேற்று பேசினார். அப்போது அவர் கசோக்கி படுகொலை விசாரணை குறித்த உண்மைகளை வெளியிட்டார். அவர் கசோக்கி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பாக சவுதி அரேபிய தூதரகம் அருகேயுள்ள காட்டினை சவுதி அரேபிய ஏஜெண்டுகள் பார்வையிட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
இந்த காட்டில்தான் கசோக்கியின் உடல் வீசப்பட்டிருக்கலாம் என கருதி துருக்கி அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் உடல் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.