

டோக்கியோ,
பல வளர்ந்த நாடுகளை விட, குறைவான அளவிலேயே கொரோனா தொற்றுகளையும், மரணங்களையும் ஜப்பான் சந்தித்துள்ளது. அங்கு இதுவரை, 16,569 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 825 பேர் உயிரிழ்ந்துள்ளனர். 13,244 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், ஜப்பானில் ஊரடங்கைத் தளர்த்துவதாக அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த ஏப்., 7ம் முதல் நாட்டின் சில பகுதிகளிலும் பின்னர் நாடு முழுவதும் அவசர நிலை மற்றும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தற்போது கொரோனா வைரஸ் பரவல் வெகுவாகக் குறைத்துள்ளது. இருந்தும், ஊரடங்கை நீக்குவதற்கு மிகக்கடுமையான அளவுகோல்களை நாங்கள் கொண்டிருந்தோம். இப்போது அந்த அளவுகோளை எட்டிவிட்டதாக நம்புகிறோம்.
ஜப்பானில் சில இடங்களில் அவரச நிலை தளர்த்தப்பட்டாலும் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு நீடித்து வந்தது. மக்களின் ஒத்துழைப்புடன் கொரோனாவை வீழ்த்தியுள்ளோம். அதனால் இனி, அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. இதன் மூலம் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாலும், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுதல், மாஸ்க் அணிதலை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.