

பிஜீங்,
ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் சீனா, ரஷியா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்று உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த ஆண்டுதான் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக சேர்ந்தன.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-வது மாநாடு சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில் உள்ள கிங்தாவோ நகரில் இன்று மாலை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. சீன அதிபர் ஜின்பிங் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சீனாப்புறப்பட்டு சென்றார். இந்தநிலையில் குயிங்ட்டோ நகர் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது, இந்த பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களுக்கு மாலை ஜின்பிங் விருந்து அளிக்கிறார். இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிற நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து பேச இருக்கிறார்.