மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் :கொழும்புவில் கலவரம் இலங்கை முழுவதும் ஊரடங்கு

கொழும்பில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் :கொழும்புவில் கலவரம் இலங்கை முழுவதும் ஊரடங்கு
Published on

கொழும்பு:

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். இதனால் போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். எனினும் மக்கள் போராட்டம் ஆங்காங்கே தீவிரமாக நடைபெறுகிறது.

அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று மகிந்த கூறி உள்ளார்.

இந்நிலையில், கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.

இதேபோல் பிரதமரின் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு, பிரதமர் பதவி விலக வேண்டாம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மகிந்தவின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் போராட்டக்காரர்களை மகிந்த ஆதரவாளர்கள் தாக்கினர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் தாக்க முயன்றதால் பெரும் பதற்றம் உருவானது. போலீசார், மகிந்த ஆதரவாளர்களின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில், கொழும்புவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொழும்பு தெற்கு, வடக்கு, மத்திய பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் என காவல்துறை அறிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்சே அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நிதானமிழந்தால் வன்முறை வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் நாம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு பொருளாதார தீர்வு தேவை, அதை தீர்க்க இந்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார் என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com