ஈரானில் அரசு தொலைக்காட்சியை ஹேக்கிங் செய்த போராட்டக்காரர்கள்

ஈரானில் அரசு தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பை போராட்டக்காரர்கள் ஹேக்கிங் செய்து வீடியோ வெளியிட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.
ஈரானில் அரசு தொலைக்காட்சியை ஹேக்கிங் செய்த போராட்டக்காரர்கள்
Published on

தெஹ்ரான்,

ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்களின்படி ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற சூழலில், தெஹ்ரான் நகரில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த மாதம் 17-ம் தேதி உயிரிழந்து போனார்.

இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 154 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த சூழலில், சனந்தஜ் மற்றும் சாக்கிஜ் பகுதிகளில் பள்ளி மாணவ மாணவியர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

அவர்களை கட்டுப்படுத்த ராணுவ படைகள் களமிறங்கின. இதில், சனந்தஜ் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காரில் இருந்த ஓட்டுனர் ஒருவரும், வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் மற்றொருவரும் என 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சாக்கிஜ் நகரில் பள்ளியில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 ஆசிரியர்கள் காயமடைந்தனர். இதனை ஹெங்காவ் என்ற ஈரான் நாட்டு மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்து உள்ளது.

ஈரானின் சாக்கிஜ், திவாந்தரெ, மகபத் மற்றும் சனந்தஜ் ஆகிய நகரங்களில் பரவலாக போராட்டம் தீவிரமடைந்து உள்ளது என ஹெங்காவ் அமைப்பு தெரிவித்து உள்ளது. இதுவரை நாடு முழுவதும் 154 பேர் பலியான நிலையில், இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 60 என்ற அளவிலேயே ஈரான் அரசு தொடர்புடைய ஊடக தகவல் குறிப்பிட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரானிய இஸ்லாமிய குடியரசின் நியூஸ் நெட்வொர்க் சார்பிலான தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பின்போது உள்ளே புகுந்த புரட்சிக்காரர்கள் சில நிமிடங்கள் வரை நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

புஷெர் என்ற தெற்கு நகரில் அந்நாட்டு மத தலைவரான அயதுல்லா அலி காமினி கலந்து கொண்ட கூட்டம் ஒன்றின் நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டபோது, இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது. அதில் நிகழ்ச்சி சில வினாடிகள் வரை போராட்டக்காரர்களின் செய்கையால் ஹேக்கிங் செய்யப்பட்டு, பெரிய மீசை, தாடி மற்றும் புருவங்களுடன் கூடிய கருப்பு வண்ண முகமூடி அணிந்த கார்ட்டூன் வரைபட தோற்றம் காட்டப்பட்டு உள்ளது. இந்த ஹேக்கிங்கிற்கு அவர்கள் பொறுப்பு ஏற்று உள்ளனர்.

அதனை தொடர்ந்து காமினியின் படமும், ஈரானில் கடந்த மாதம் உயிரிழந்த இளம்பெண்களான நிகா ஷாகராமி, ஹதீஸ் நஜாபி, மஹ்சா ஆமினி மற்றும் சரீனா இஸ்மாயில்ஜடே ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்படம் சில வினாடிகள் வரை திரையில் காட்டப்பட்டன.

எங்களுடன் இணைந்து, போராட வாருங்கள் என்ற செய்தியும் அந்த புகைப்படங்களுடன் காட்டப்பட்டன. எங்களுடைய இளைஞர்களின் ரத்தம் உங்கள் பிடியில் இருந்து வழிந்தோடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com