அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரம்: ஈரானில் அரசு கட்டிடத்திற்கு தீ வைப்பு

ஈரான் முழுவதும் இணையம் மற்றும் செல்போன் சேவைகள் முடக்கப்பட்டன.
அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரம்: ஈரானில் அரசு கட்டிடத்திற்கு தீ வைப்பு
Published on

தெக்ரான்,

ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த 10 நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் போராட்டக்காரர்கள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதில் 45 பேர் பலியாகி உள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை. ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிர மடைந்து உள்ளது.

இந்த நிலையில் ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி ஒரு மாபெரும் போராட்டத்திற்காக ஈரான் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இரவு 8 மணிக்கு ஒன்றுகூடி அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இதற்கிடையே நேற்று இரவு தலைநகர் தெக்ரானில் மக்கள் திரண்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். அதே போல் நாட்டின் மற்ற பகுதி களிலும் போராட்டங்கள் நடந்தன. அப்போது அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பல சந்தைகளும் கடைகளும் மூடப்பட்டன. தெக்ரானில் போராட்டம் தீவிரமாக இருந்தது. அங்கு ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.

இன்று அதிகாலை வரை பேரணிகள் நடந்த நிலையில் போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. சாலைகளில் பொருட்களை போட்டு எரித்தனர். சில இடங்களில் பாதுகாப்பு படையினருடன் மோதல்கள் ஏற்பட்டன. இஸ்பஹானில் உள்ள ஈரான் அரசின் ஒளிபரப்பு நிறுவனத்தின்கட்டிடத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதில் அக்கட்டிடம் கொளுந்துவிட்டு எரிந்தது. அதேபோல் ஈரானின் தெற்கில் உள்ள முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாசில் தெருக்களில் ஆயிரகணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து ஈரான் முழுவதும் இணையம் மற்றும் செல்போன் சேவைகள் முடக்கப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com