

கொழும்பு,
இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று (புதன்கிழமையன்று) இலங்கை அதிபர் அனுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்தும், அதனை உறுதி செய்வதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
3 நாள் பயணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை சென்றடைந்த ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளை திஸாநாயக்கவிடம் தெரிவித்ததாகவும், அவரது அரசாங்கம் பதவியில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக அவருக்குப் பாராட்டுத் தெரிவித்ததாகவும் கூறினார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
கொழும்பில் இன்றைய தினம் இலங்கை ஜனாதிபதி அதி மேதகு அனுர குமார திசாநாயக்க அவர்களுடன், மிகவும் ஆக்கபூர்வமான சந்திப்பினை மேற்கொண்டிருந்தேன். பிரதமர் நரேந்திர மோடி அவர்களது வாழ்த்துகளை அவருடன் பகிர்ந்துகொண்டதுடன், அவரது அரசாங்கம் இரண்டு வருடங்களை நிறைவு செய்தமையையிட்டு அவருக்கு பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.
நாகரிக இரட்டையர்களாகவும், நெருக்கமான அயலவர்களாகவும், கடல்மார்க்கமான பங்காளர்களாகவும் இந்தியாவும் இலங்கையும், நமது நாடுகளின் அபிவிருத்தி மற்றும் நமது மக்களின் நலனுக்காக தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்றும், அதேபோல நமது பிராந்தியத்தின் பாதுகாப்பு, பாதுகாவல், அமைதி மற்றும் செழுமைக்காக ஒன்றிணைந்து பணியாற்றும் என்றும் நாம் மீள உறுதிபூண்டுள்ளோம்.
என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே நேற்று இந்திய வம்சாவளியினருடனான சந்திப்பின்போது பேசிய அவர், “இந்தியா-இலங்கை இடையிலான உறவு என்பது வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ளது. நெருக்கடியான காலங்களில் இந்தியா எப்போதும் இலங்கைக்கு உறுதுணையாக நிற்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு என்பது பகிரப்பட்ட வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் கருத்துகளுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது. இந்தியாவின் கருத்துகளை சர்வதேச நாடுகள் கவனித்து வருகிறது” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
கடந்த 38 ஆண்டுகளில் இந்தியப் பாதுகாப்புத் துறை மந்திரி ஒருவர் இலங்கைக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.