பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரனில் முடிவு

பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரனில் விக்கிரமசிங்கே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரனில் முடிவு
Published on

கொழும்பு,

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கை மக்கள் முன்னணியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. பின் 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சஜித் பிரேமதாசாவும், சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கோத்தபய ராஜபக்சேவும் முன்னிலை வகித்தனர். இதனால் வெற்றி வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தநிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே 13,60,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து 52.25 சதவீத வாக்குகளை பெற்ற கோத்தபய ராஜபக்சே நாளை இலங்கை அதிபராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் ஆலேசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, பொது தேர்தலுக்கு செல்வது குறித்து, ஆலேசிக்கப்பட்டதாகவும், பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்கிரமசிங்கே விலகி விட்டு எதிர்க்கட்சி தலைவராக செயல்படவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com