கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அரிய வகை "இளஞ்சிவப்பு வைரம்" கண்டுபிடிப்பு

அங்கோலாவில் உள்ள சுரங்கத்தில் அரிய வகையான வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

சிட்னி,

ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் உள்ள சுரங்கத்தில் அரிய வகையான வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 300 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரமாகும் என ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக லுகாபா டயமண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 170 காரட் எடை கொண்ட இந்த இளஞ்சிவப்பு நிற வைரமானது தி லுலோ ரோஸ் என அழைக்கப்படுகிறது. இந்த வைரமானது, நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள லுலோ சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய இளஞ்சிவப்பு வைரம் இதுவாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லுலோ சுரங்கத்தில் இருந்து கண்கவர் வைரம் எடுக்கப்பட்டதன் மூலம் உலக அளவில் அங்கோலா முக்கிய இடத்தில் தொடர்ந்து உள்ளது. என அங்கோலாவின் கனிம வள அமைச்சர் டயமன்டினோ அசெவெடோ தெரிவித்துள்ளார்.

லுலோ ரோஸ் வைரத்தின் உண்மையான மதிப்பை அறிய அதனை மெருகூட்ட வேண்டும். அவ்வாறு மெருகூட்டும் போது அதன் எடையில் சுமார் 50 சதவீதத்தை இழக்க நேரிடும். இந்த வைரமானது சர்வதேச டெண்டரில் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படும். இது அதிக விலைக்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாங்காங்கில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் சுமார் 59.6 காரட் பிங்க் ஸ்டார் வைரம், 71.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது. இதுவரை விற்கப்பட்ட வைரங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்டது இதுவாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com