

ஜெனிவா,
சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன், தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இது தங்களுக்கு அச்சுறுத்தல் என்று கூறி ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கி உள்ளது. முன்னதாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர பகுதியாக ரஷ்யா அறிவித்தது.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்து வரும் நிலையில் தற்போது தாக்குதல் நடத்ததத் தொடங்கி விட்டது. அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருவதாகவும், ரஷ்ய ராணுவத்திற்கு பொதுமக்கள் இலக்கு அல்ல என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர். ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனில் சிந்திப்பதற்கு பயமுறுத்தும் அளவில் பெரிய அளவிலான உயரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் அச்சம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான பீட்டர் மௌரர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், நீர் மற்றும் மின்சார ஆலைகள் போன்ற பொதுமக்களின் பொருள்கள் பெருமளவில் அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதால், துன்பம் அதிகரிக்கும் என்று நான் அஞ்சுகிறேன். இதனால் பெரிய அளவில் உயிரிழப்பு மற்றும் மக்களின் இடப்பெயர்வு, குடும்பப் பிரிவினை போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார்.