பூமிக்கு திரும்பும் பயணம் தயார்; டிராகன் விண்கலத்தில் அமர்ந்த சுபான்ஷு சுக்லா

டிராகன் விண்கலம், 24 மணி நேர பயணத்திற்கு பிறகு நாளை பகல் சுமார் 3 மணி அளவில் பூமியை வந்தடையும்.
பூமிக்கு திரும்பும் பயணம் தயார்; டிராகன் விண்கலத்தில் அமர்ந்த சுபான்ஷு சுக்லா
Published on

நியூயார்க்,

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த ஜூன் 25-ந்தேதி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகிய 4 பேரும் புறப்பட்டு சென்றனர். அவர்கள் விண்வெளியில் பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இவர்களுடைய 14 நாட்கள் ஆராய்ச்சி பணி நிறைவடைந்து, இன்று பூமிக்கு திரும்புகின்றனர். இதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்புவதற்காக டிராகன் விண்கலத்திற்குள் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்பட விண்வெளி வீரர்கள் 4 பேரும் சென்றுள்ளனர். அவர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தனர். விண்கலத்துடனான கேபிள்களை இணைத்து, தங்களுடைய புறப்பாட்டிற்காக தயார் நிலையில் உள்ளனர்.

இதற்காக, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. இதன்பின்னர், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் விண்கலத்திற்குள் நுழைந்தனர்.

தொடர்ந்து மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்படும். மாலை 4.35 மணிக்கு பூமியை நோக்கிய விண்கலத்தின் பயணம் தொடங்கும். சுமார் 24 மணி நேர பயணத்திற்கு பிறகு நாளை பகல் சுமார் 3 மணி அளவில் பூமியை வந்தடையும்.

விண்கலம், வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க கடற்படையும் தயார் நிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com