வங்காளதேசத்தில் அதிகரிக்கும் பதற்றம்: சிட்டகாங் நகரில் இந்திய விசா விண்ணப்ப சேவைகள் நிறுத்தம்

மறுஅறிவிப்பு வரும் வரை விசா விண்ணப்ப சேவைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்கா,
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாணவர் போராட்டங்களை தொடர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசினா விலகினார். அந்த மாணவர் போராட்டங்களில் முக்கிய தலைவராக இருந்து செயல்பட்டவர் ஷரீப் உஸ்மான் ஹாடி(வயது 32). இவர் பிப்ரவரி 12-ந்தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட இருந்தார்.
இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி மத்திய டாக்காவில் உள்ள பிஜோய்நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஷரீப் உஸ்மான் ஹாடியை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த ஷரீப் உஸ்மான் ஹாடி, சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிமை அவர் உயிரிழந்தார்.
இளைஞர்களின் முக்கிய தலைவராக இருந்த ஷரீப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதை தொடர்ந்து, வங்காளதேசம் முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறைகளும், கிளர்ச்சிகளும் வெடித்துள்ளன. குறிப்பாக சட்டோகிராம் பகுதியில் உள்ள இந்திய உதவி ஆணையரின் இல்லத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து டாக்கா, குல்னா, ராஜ்சாகி ஆகிய இடங்களில் உள்ள இந்திய விசா மையங்கள் மூடப்பட்டன. பின்னர் நிலைமை சற்று சீரானதை தொடர்ந்து டாக்காவில் உள்ள விசா மையம் மீண்டும் திறக்கப்பட்டது. வங்காளதேசத்தில் உள்ள அனைத்து இந்திய விசா விண்ணப்ப சேவை மையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிட்டகாங் நகரில் இந்திய விசா விண்ணப்ப சேவைகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை விசா விண்ணப்ப சேவைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், உயிரிழந்த ஷரீப் உஸ்மான் ஹாடியின் உடல் டாக்கா பல்கலைக்கழக மசூதி அருகே, கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாமின் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதில் சிலர் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதோடு, ‘சகோதரர் ஹாடியின் இரத்தத்தை வீணாக்கமாட்டோம்’ என்பது போன்ற முழக்கங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.






