குற்ற விகிதம் பற்றிய லைவ் நிகழ்ச்சியிலேயே திருட்டு; நிருபர் அதிர்ச்சி

ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் குற்ற விகிதம் பற்றிய லைவ் நிகழ்ச்சியில் நிருபர் உள்ளிட்ட குழுவினருக்கு தெரியாமல் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
குற்ற விகிதம் பற்றிய லைவ் நிகழ்ச்சியிலேயே திருட்டு; நிருபர் அதிர்ச்சி
Published on

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் செவன் நியூஸ் என்ற தொலைக்காட்சி சேனலின் நிருபர் ஹெய்டன் நெல்சன், சூரிய உதயம் என்ற காலை நிகழ்ச்சிக்காக தயாரானார். அவர் ரன்டில் என்ற வணிக வளாகத்தில் இருந்தபடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டு இருந்துள்ளார்.

பொதுமக்கள் அதிகம் வரக்கூடிய வணிக வளாகங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களின் விகிதங்களை புள்ளி விவரங்களுடன் வழங்கி கொண்டிருந்தபோது ஹெய்டனையும், அவரை படம் பிடித்து கொண்டிருந்த கேமராமேனையும் மர்ம நபர் ஒருவர் அணுகி, வாழ்த்துகளை கூறி விட்டு நகர்ந்துள்ளார்.

இவர்களும் தொடர்ந்து நிகழ்ச்சியை லைவ்வாக நடத்தி கொண்டிருந்தனர். ஆனால், யாரும் கவனிக்காத வகையில், அந்த நபர் லைவ் நிகழ்ச்சிக்காக ஸ்டாண்டின் மீது வைக்கப்பட்டு இருந்த 3 லைட்டுகளில் (விளக்கு) ஒரு லைட்டை கையோடு எடுத்து சென்று விட்டார். இந்த திருட்டை அப்போது ஒருவரும் கவனிக்கவில்லை.

சிறிது நேரம் கழித்தே லைட் திருடு போனது தெரிய வந்தது. இதனையும் நிகழ்ச்சியின்போது குறிப்பிட்ட ஹெய்டன், இதில் இருந்து குற்ற செயல்கள் எந்தளவுக்கு நடக்கின்றன என நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் என கூறினார். அந்த லைட் எதற்காக பயன்படுகிறது என்பதோ அல்லது அதன் மதிப்பு என்னவென்றோ அதனை எடுத்து சென்றவருக்கு ஒன்றும் தெரியாது என்றும் ஹெய்டன் வருத்தத்துடன் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com