

வாஷிங்டன்,
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு களத்தில் உள்ளன. அமெரிக்க வீரர்கள் மட்டுமே சுமார் 5,000 பேர் வரை அங்கு உள்ளனர். இவர்கள் அனைவரும் ஈராக்கில் உள்ள ராணுவ மற்றும் விமான படைத் தளங்களில் முகாமிட்டுள்ளனர்.
இந்தநிலையில் அண்மைக்காலமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்க வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பிறகு ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின.
அமெரிக்க ராணுவ படைத்தளங்கள் மீது, ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிரியாவில் ஈராக் எல்லையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் நிலைகளை குறி வைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக நேற்று ஈராக்கில் அமெரிக்க படைகளை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. மேற்கு பகுதியில் அன்பர் மாகாணத்தில் உள்ள விமான படைத்தளத்தில் அடுத்தடுத்து 13 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
இந்தநிலையில் ஈராக்கில் அமெரிக்க படையின் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் கூறும்போது, தற்போது நாங்கள் தாக்குதல் தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். நல்லவேளையாக ராக்கெட் தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால் அமெரிக்க ஒப்பந்தகாரர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார். இந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பதை நாங்கள் அடையாளம் கண்டு வருகிறோம். இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றார்.
மேலும் இதுதொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில் ஈராக்கில் ராக்கெட் தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பதிலளிப்பது தொடர்பாக பரிசீலிக்க கூடும் என்று எச்சரித்து இருக்கிறது.