

பாக்தாத்,
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மோதல் வெடித்தது. ஈராக்கில் இருக்கும் ஈரான் ஆதரவு பிரிவினைவாதிகள் அங்குள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தலைநகர் பாக்தாத்தில் வெளிநாட்டு தூதரகங்கள், அரசு நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ள பசுமை மண்டலத்தில் நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த ராக்கெட்டுகள் அமெரிக்க தூதரகத்துக்கு மிக அருகில் விழுந்து வெடித்தன. தூதரகத்தின் எல்லை சுவருக்கு அருகே அடுத்தடுத்து 4 ராக்கெட்டுகள் விழுந்து வெடித்ததில் அங்கு கரும்புகை மண்டலம் உருவானது. எனினும் இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏற்பட்டதா, தூதரக கட்டிடம் சேதம் அடைந்ததா என்பவை உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.