

கீவ்,
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.
இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷிய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார். உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் எதிரொலியாக, கச்சா எண்ணெய் விலையும் 100 அமெரிக்க டாலராக உயர்ந்து உள்ளது. ரஷிய வீரர்கள் உக்ரைனுக்குள் நுழைந்ததற்கான அறிகுறியாக, கீவ் நகரில் வெடிகுண்டு சத்தம் ஒன்றும் கேட்டுள்ளது. இதன்படி, மரியுபோல் என்ற கிழக்கு துறைமுக நகரில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.