மின் உற்பத்தியை அடியோடு முடக்க திட்டமா..? உக்ரைன் முழுவதும் தாக்குதல் நடத்திய ரஷியா

மின்உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடப்பதால் அவசரகால மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி தெரிவித்தார்.
மின் உற்பத்தியை அடியோடு முடக்க திட்டமா..? உக்ரைன் முழுவதும் தாக்குதல் நடத்திய ரஷியா
தாக்குதல் நடந்த பகுதியில் தீயணைப்பு பணி
Published on

கீவ்:

உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தலாம் என அமெரிக்கா அனுமதி வழங்கியதையடுத்து ரஷியா தனது தாக்குதலை விரிவுபடுத்தி உள்ளது. இன்று உக்ரைன் முழுவதும் பல்வேறு நகரங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக மின் உற்பத்தி செய்யக்கூடிய உள்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கீவ், கார்கிவ், ரிவ்னே, கிமல்நிட்ஸ்கி, லட்ஸ்க் மற்றும் மத்திய, மேற்கு உக்ரைனில் உள்ள நகரங்களில் வெடிகுண்டுகள் வெடித்து பாதிப்புகளை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி உக்ரைன் எரிசக்தி துறை மந்திரி ஹெர்மன் ஹலுஷ்செங்கோ தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உக்ரைன் முழுவதும் மின்உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாகவும், இதன் காரணமாக, நாடு முழுவதும் அவசரகால மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.

'உக்ரைனின் உள்கட்டமைப்புகளை தாக்கவும், குளிர் காலத்தில் பொதுமக்களுக்கு எதிராக போர் தொடுக்கவும் ரஷியா ஏவுகணைகளை குவித்து வைத்திருந்தது. வட கொரியா போன்ற அவர்களின் பைத்தியக்கார கூட்டாளிகள் அவர்களுக்கு உதவி செய்தார்கள்' என உக்ரைன் அதிபர் மாளிகை அதிகாரி அண்ட்ரி யெர்மாக் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குளிர்காலத்திற்கு முன்னதாக நாட்டின் மின் உற்பத்தி திறனை அழிப்பதே ரஷியாவின் நோக்கமாக இருக்குமோ? என மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com