

வாஷிங்டன்,
தேர்தலில் டொனால்டு டிரம்பை வெற்றி பெற செய்ய ரஷியா தலையிட்டதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து, அமெரிக்க புலனாய்வு முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் தலைமையிலான விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்குழு இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி டிரம்பிடம் விசாரிக்க வேண்டும் என்று சமீபத்தில் கருத்து தெரிவித்தது. இந்த நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் ரஷிய தலையீடு விவகாரம் குறித்து ராபர்ட் முல்லரின் விசாரணைக்குழு உங்களிடம் விசாரணை நடத்துமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய அவர், நான் அதை தான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன். ராபர்ட் முல்லரின் விசாரணைக்குழு என்னிடம் விசாரணை நடத்த விரும்பினால், நான் அமெரிக்க சட்டத்துக்கு உட்பட்டு சாட்சியம் அளிப்பேன் என்றார்.
உடனே நிருபர்கள், விசாரணையின் போது ராபர்ட் முல்லர் உங்களை சிறப்பாக நடத்துவார் என நினைக்கிறீர்களா? என்று கேட்டனர்.
அதற்கு டிரம்ப், பொறுத்திருந்து பார்க்கலாம் என்று பதில் அளித்தார்.