

விலாடிவோஸ்டோக்,
ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசிய பிறகு, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் 4 புகைப்படங்களை வெளியிட்டார். அவற்றில் 2 படங்கள் நேற்றும், 2 படங்கள் 2001-ம் ஆண்டு ரஷிய பயணத்தின்போதும் எடுக்கப்பட்டவை.
2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அருகே அமர்ந்து, அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த மோடி ஒரு ஆவணத்தில் கையெழுத்திடுகிறார். மற்றொரு புகைப்படத்தில், அப்போதைய ராணுவ மந்திரி ஜஸ்வந்த் சிங்குடன் மோடி நின்று கொண்டிருக்கிறார்.
அத்துடன், அந்த பயணத்தின் மலரும் நினைவுகளை டுவிட்டரில் மோடி பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
புதினை சந்தித்து பேசியபோது, என் மனம், 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இந்தியா-ரஷியா பேச்சுவார்த்தைக்கு சென்றது. அப்போது, வாஜ்பாய் பிரதமராக இருந்தார். குஜராத் முதல்-மந்திரி என்ற முறையில், அவரது பிரதிநிதிகள் குழுவில் இடம்பெறும் பேறு பெற்றேன்.
அப்போது முதல்முறையாக ரஷிய அதிபர் புதினை சந்தித்தேன். நான் முக்கியத்துவம் குறைந்தவன் என்றோ, ஒரு சிறிய மாநிலத்தை சேர்ந்தவன் என்றோ, ஒரு புதுமுகம் என்றோ அவர் என்னை உணர வைக்கவில்லை. என்னை ஒரு நண்பனாக நடத்தினார். அது நட்புறவுக்கான கதவை திறந்து வைத்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.