

ஜெனீவா,
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.
இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷிய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார். உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் எதிரொலியாக, கச்சா எண்ணெய் விலையும் 100 அமெரிக்க டாலராக உயர்ந்து உள்ளது. ரஷிய வீரர்கள் உக்ரைனுக்குள் நுழைந்ததற்கான அறிகுறியாக, கீவ் நகரில் வெடிகுண்டு சத்தம் ஒன்றும் கேட்டுள்ளது. இதன்படி, மரியுபோல் என்ற கிழக்கு துறைமுக நகரில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், ஐ.நா. அவசரகால கூட்டத்தில் ரஷியா சார்பில் பேசிய அந்நாட்டு பிரதிநிதி, பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களை பாதுகாக்கவே சிறப்பு நடவடிக்கையை அதிபர் புதின் அறிவித்து உள்ளார்.
உக்ரைனில் இனப்படுகொலை நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்திலேயே நாங்கள் உள்ளோம். ஐ.நா.வின் 51வது சட்டப்பிரிவின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. உக்ரைனில் சூழ்நிலையை நாங்கள் ஆய்வு செய்வோம் என கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்த கூட்டத்தில் பேசிய உக்ரைன் பிரதிநிதி தனது நாட்டு சார்பில் கடுமையான பதிவுகளை வெளியிட்டார். அவர் பேசும்போது, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் போர் அறிவிப்பு வெளியிட்டதற்கான குரல் பதிவு உள்ளது. இந்த போரை நிறுத்த வேண்டிய பொறுப்பு இந்த அமைப்புக்கு (ஐ.நா. அமைப்பு) உள்ளது. இந்த போரை நிறுத்த வேண்டும் என ஒவ்வொருவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன் என்று கூறியுள்ளார். இதன்பின் அவர், உங்களுடைய அதிபர் போருக்கு அழைப்பு விடுத்த வீடியோவை நான் வெளியிடவா? என்று ரஷிய பிரதிநிதியை நோக்கி ஆவேசமுடன் கேள்வி எழுப்பினார்.