

சியோல்,
2ம் உலக போரின்பொழுது ஜப்பான் ராணுவம் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வந்தது. ராணுவ வீரர்களின் உபயோகத்திற்காக பயன்பட்ட இந்த பெண்களின் எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த 1942ம் ஆண்டு 17 வயது நிறைந்த லீ என்ற பெண் பணி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அவரை ஜப்பானிய ராணுவ வீரர்கள் கடத்தி சென்றனர். அதன்பின் லீயை வடகிழக்கு சீனாவுக்கு கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தனர். அங்கு ஜப்பான் ராணுவ வீரர்கள் அவரை பாலியல் அடிமையாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், தென்கொரியாவில் வசித்து வந்த லீ தனது 94 வயதில் உடல்நல குறைவால் இன்று காலை மரணம் அடைந்து உள்ளார். இதற்கு முன் தென்கொரிய அரசு பதிவு செய்திருந்த பாலியல் அடிமைகளின் எண்ணிக்கை 238 ஆக இருந்தது. இவர் மரணம் அடைந்த நிலையில், போர் காலங்களில் பாலியல் அடிமையாகி, பாதிக்கப்பட்டு உயிருடன் இருப்பவர்களின் எண்ணிக்கை 24 ஆக குறைந்துள்ளது.
கடந்த 1910ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை தென்கொரியா நாடு ஜப்பானின் காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்தது.