

ரியாத்,
சவுதி அரேபியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு இதுவரை 1.72 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை சவுதி அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமெரிக்காவின் பைசர்-பயோஎன்டெக் நிறுவனம் தயாரித்துள்ள சிறார்களுக்கான தடுப்பூசியை சவுதி உணவு மற்றும் ஆய்வு கழகம் பரிசோதனை செய்தது.
ஆய்வக பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்து, தடுப்பூசியின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்டதாக சவுதி உணவு மற்றும் ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சவுதி அரேபியாவில் 12 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.