

கெய்ரோ,
சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் இந்த வாரம் எகிப்து நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டார். அவர் உள்ளூர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் ஈரான், துருக்கி மற்றும் தீவிரவாத குழுக்கள் ஆகியவை நவீன தீய முக்கோணம் என குறிப்பிட்டு உள்ளார்.
ஒரு புறம் ஈரான் மற்றும் மறுபுறம் ரஷ்யா மற்றும் சிரியா என இவர்களுக்கு இடையேயான நெருங்கிய உறவு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என சவூதி அரேபியா விரும்புகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
ரியாத் நகரில் இந்த மாத இறுதியில் நடைபெறும் அரபு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு கத்தார் நாட்டுக்கு தடை விதிக்கப்படாது. ஆனால், அந்நாட்டுடனான உறவு முறிவு நீண்ட நாட்களுக்கு தொடரும் என்றும் கூறியுள்ளார்.
சிறிய ஆனால் வளமிக்க நாடான கத்தார் தீவிரவாத குழுக்களை ஆதரிக்கிறது என்றும் ஈரான் நாடுடன் நெருங்கிய தொடர்பினை வலுப்படுத்தி வருகிறது என்றும் குற்றச்சாட்டு எழுப்பி கடந்த ஜூனில் அந்நாட்டுடனான தொடர்பினை சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் முறித்து கொண்டன.