கொரோனா வைரசை கொல்லும் ‘சூயிங்கம்’ - அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிக்கிறார்கள்

கொரோனா வைரசை கொல்லும் சூயிங்கத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிக்கிறார்கள்.
கொரோனா வைரசை கொல்லும் ‘சூயிங்கம்’ - அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிக்கிறார்கள்
Published on

வாஷிங்டன்,

புதுப்புது உருவெடுத்து கொரோனா வைரஸ் உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு தடைபோடும், கட்டுப்படுத்தும் வழிகள் குறித்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், கொரோனா வைரசை கொல்லும் சூயிங்கம்மை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் இறங்கியிருக்கிறார்கள். இதுதொடர்பாக, இந்த ஆய்வுக்கு தலைமை வகித்த அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ஹென்றி டேனியல் கூறுகையில், கொரோனா வைரஸ், மனிதர்களின் உமிழ்நீர் சுரப்பிகளில் பெருகுகிறது. எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போது, இருமும்போது, பேசும்போது வைரஸ் அவர் வாயிலிருந்து வெளியேறி மற்றவர்களை அடையக்கூடும்.

உமிழ்நீரில் உள்ள கொரோனா வைரசை எங்கள் சூயிங்கம் கொல்லும். இதன்மூலம், கொரோனா வைரஸ் உருவாகும் இடத்திலேயே அழிக்கப்படுவதுடன், அதன் பரவலும் தடுக்கப்படும் என்று கூறுகிறார்.

இதற்காக, தாவரத்தில் இருந்து பெறப்படும் ஏசிஇ2 என்ற புரதம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, கொரோனா நோயாளிகளின் உமிழ்நீர் மாதிரியில் இதை பரிசோதித்தபோது நல்ல பலனை கொடுத்திருக்கிறது.

அடுத்தகட்டமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புரதம் அடங்கிய சூயிங்கம்மை கொடுப்பது பாதுகாப்பானதாகவும், திறன்மிக்கதாகவும் இருக்குமா என்று அறிவதற்கான முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் இறங்கியிருக்கிறார்கள். அதற்காக அனுமதி பெறும் முனைப்பில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும் அந்த வைரஸ் தொற்றலாம், அவர்கள் மூலம் பிறருக்கு பரவலாம் என்ற நிலையில், வைரஸ் பரவலுக்கு தடை போடுவது முக்கியம். அதற்கு இந்த சூயிங்கம் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கையோடு சொல்கிறார்கள். ஆரம்பகட்ட ஆய்வுகளை எல்லாம் தாண்டி இந்த சூப்பர் சூயிங்கம் மட்டும் விற்பனைக்கு வந்துவிட்டால், சூயிங்கம் மென்றே கொரோனோ வைரசை கொன்றுவிடலாம்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com