

வாஷிங்டன்,
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற உணவு திருவிழாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 2 வயது சிறுவன் உட்பட 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு திருவிழாவில் ஆறுசியாட்டில் நகரின் மையப்பகுதியில் உள்ள ‘பைட் ஆப் சியாட்டில்’ என்ற மைதானத்தில் பிரம்மாண்ட உணவு திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், குடும்பம் குடும்பமாக வந்து உணவுகளை ருசித்து கொண்டிருந்தனர். நேற்று மாலை நேரத்தில் திருவிழா களைகட்டியிருந்தபோது, திடீரென பயங்கர துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.
அங்கிருந்த இரண்டு மர்ம நபர்கள், திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. பெண் உள்பட 3 பேர் பலி இந்த துப்பாக்கிச் சூட்டில் குண்டடி பட்டு, 19 வயது இளைஞன் மற்றும் 44 வயது நபர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 56 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. படுகாயமடைந்த 2 வயது சிறுவன் உட்பட 4 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சியாட்டில் நகர போலீஸ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். துப்பாக்கி சூடு நடத்தியதாக 15 வயது சிறுவன் ஒருவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவனிடமிருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். உணவு திருவிழாவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.