ஜெர்மனியை உலுக்கும் கடும் வெப்ப அலை: 10,000 பேர் உயிரிழப்பு!

ஆண்களை விட பெண்களே இந்த வெப்ப அலையினால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
ஜெர்மனி நாட்டை உலுக்கும் கடும் வெப்ப அலையால் 10,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோப்புப்படம்
Published on

பெர்லின்,

ஜெர்மனி நாட்டை உலுக்கும் கடும் வெப்ப அலையால் 10,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜூன் மாதம் உச்சக்கட்டம்

கடந்த ஜூன் மாத இறுதியில் மேற்கு ஐரோப்பாவில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்பக் காற்று வீசியது. ஜெர்மனியின் பல பகுதிகளில் வெப்பநிலை 42°C (107.6°F) வரை பதிவாகி சாதனை படைத்தது. ஜூன் 22 முதல் 28 வரையிலான ஒரே வாரத்தில் மட்டும் வழக்கமான சராசரியை விட உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் 5,100-க்கும் மேற்பட்டோர் வெப்பத்தால் மடிந்தனர்.

தொடரும் பாதிப்பு

ஜூலை 13 முதல் 19 வரையிலான இடைப்பட்ட ஒரே வாரத்தில் மட்டும் கூடுதலாக 1,900 பேர் உயிரிழந்தனர். தற்போது ஜெர்மனியின் பல மாகாணங்களில் மீண்டும் வெப்பநிலை 39°C முதல் 40°C வரை உயர்ந்து வருவதால், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

முதியவர்களுக்கே அதிக ஆபத்து

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். இதில் 85 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 5,420 ஆக உள்ளது. ஆண்களை விட முதிய பெண்களே இந்த வெப்ப அலையினால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

மறைமுக காரணங்கள்

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கடுமையான வெப்பம் நேரடியாக மட்டுமின்றி, உடலில் ஏற்கனவே இருக்கும் இதய நோய், கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக கோளாறுகளைத் தீவிரப்படுத்துவதன் மூலமே அதிக மரணங்களை ஏற்படுத்துகிறது. இதனால் இது ஒரு "அமைதியான கொலையாளி" என்றும் அழைக்கப்படுகிறது.

வலுக்கும் கோரிக்கைகள்

ஜெர்மனியில் உள்ள மொத்த வீடுகளில் வெறும் 19 சதவீத வீடுகளில் மட்டுமே ஏர் கண்டிஷனர் வசதி உள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் கூடுதல் செலவு காரணமாக பல ஆண்டுகள் ஏசி பயன்பாட்டை அந்நாடு தவிர்த்து வந்தது. ஆனால் தற்போது நிலவும் அசாதாரண சூழலால், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் உடனடியாக குளிரூட்டும் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளும் மருத்துவப் பணியாளர்களும் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தின் காரணமாகவே ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற தீவிர வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com