வடகொரியாரில் உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு

வடகொரியாவில் உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வடகொரியாரில் உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு
Published on

சியோல்,

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் கண்டுகொள்ளாமல் 2006-ம் ஆண்டு முதல் வடகொரியா அணுக்குண்டுகளை சோதித்து வந்துள்ளது. அத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவி பரிசோதித்து வருகிறது.

இதன் காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த சோதனைக்கு மத்தியில் அங்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. உணவுப்பொருட்கள் வினியோகச்சங்கிலி முறிபட்டுள்ளது. உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

தற்போதையை நிலைமையை வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன், 1990-களில் அங்கு நிலவிய பஞ்சத்துடன் ஒப்பிட்டுள்ளார். ஆர்டியஸ் மார்ச் என்று அழைக்கப்பட்ட அந்த பஞ்சத்தில் லட்சக்கணக்கானோர் செத்து மடிந்தது வரலாற்றின் கரும்புள்ளியாக பதிவாகி உள்ளது. இதற்கிடையில் பொதுமக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று கிம் ஜாங் அன் சமீபத்தில் உத்தரவிட்டது, மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வரக்கூடிய அறுவடையை வட கொரிய மக்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி உள்ளனர். அறுவடை மூலம் கிடைக்கும் ஒவ்வொரு அரிசியையும் சோளத்தையும் பத்திரமாக சேகரிக்குமாறு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் வயல்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அறுவடையின்போது திருட்டு போனாலோ, ஏமாற்றினாலோ கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் வடகொரியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com