"கண்டதும் சுட" உத்தரவு: ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்பின் அதிரடி ராணுவ ஆணை

அடையாளம் தெரியாத படகுகளையும் தயக்கமின்றிச் சுட்டு வீழ்த்தவும், அழிக்கவும் அமெரிக்கக் கடற்படைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

"கண்டதும் சுட" உத்தரவு: ஹார்முஸ் ஜலசந்தியில் டிரம்பின் அதிரடி ராணுவ ஆணை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஈரானுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்கும் வகையில் ஹோர்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது.இதில் ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களை அமெரிக்க கடற்படை தடுத்து வருகிறது.

மேலும் ஈரான் தொடர்புடைய 2 கப்பல்களையும் சிறைபிடித்தது. இதனால் 2-வது கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் மறுத்துவிட்டது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் தனது ஆதிக்கத்தை ஈரான் அதிகப்படுத்தியுள்ளது. அந்த ஜலசந்தியை கடக்க முயன்ற 3 வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு இடையூறாகக் கடல் கண்ணிவெடிகளைப் பதிக்கும் எந்தவொரு ஈரானியப் படகையும் அல்லது அடையாளம் தெரியாத படகுகளையும் தயக்கமின்றிச் சுட்டு வீழ்த்தவும், அழிக்கவும் அமெரிக்கக் கடற்படைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானின் இத்தகைய "ஆபத்தான மற்றும் ஆத்திரமூட்டும்" செயல்கள் அமெரிக்காவின் பொறுமையைச் சோதிப்பதாகவும், இனி எச்சரிக்கை ஏதுமின்றி நேரடி ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது எந்நேரத்திலும் பாரசீக வளைகுடாவில் நேரடிப் போர் மூளும் அபாயத்தை அதிகரித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com