

வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ நகரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் இன்று (அந்நாட்டு நேரப்படி) வழிபாடு நடந்துகொண்டிருந்தது. இந்த வழிபாட்டில் சிறுவர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், அந்த வழிபாட்டு தலத்திற்குள் திடீரென 2 பேர் துப்பாக்கியுடன் நுழைந்தனர். பின்னர், வழிபாட்டு தலத்தில் இருந்தவர்கள் மீது இருவரும் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பிச்சென்ற இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், சம்பவம் நடந்த மசூதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் 17 வயது சிறுவன், 18 வயது இளைஞன் ஆகிய இருவரும் துப்பாக்கியால் தங்களை தாங்களே சுட்டு தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை செய்துகொண்ட இருவரும் மசூதியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.