தமிழ் சமூகத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகை உணர்வை அனுபவிப்பதற்காக, சிறிது நேரம் ஒதுக்குங்கள் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
சிங்கப்பூர்,
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தைத்திருநாளான நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாரம்பரிய முறையில் புது மண்பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்.
தமிழகத்தில் போகி பண்டிகை, தை பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இதன்படி, இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழ் சமூகத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள சமூக ஊடக பதிவில், பொங்கலோ பொங்கல்! நம்முடைய தமிழ் சமூகம் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையானது, குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்து, நன்றியை செலுத்தவும், நம்முடைய பாரம்பரிய வேர்களை மதிக்கவும், வரவிருக்கும் நம்பிக்கைக்குரிய ஆண்டை வரவேற்கவும் ஏற்ற ஒரு பண்டிகைக்கான காலம்.
இந்த தருணத்தில், அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். லிட்டில் இந்தியா அல்லது இந்திய பாரம்பரிய மையத்தில் பொங்கல் பண்டிகை உணர்வை அனுபவிப்பதற்காக, சிறிது நேரம் ஒதுக்குங்கள் என்று அவர் தெரிவித்து உள்ளார்.






