பள்ளத்தில் மண் சரிந்து 6 இந்திய தொழிலாளர்கள் பலி - ஓமன் நாட்டில் பரிதாபம்

ஓமன் நாட்டில், குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் புதைந்து 6 இந்திய தொழிலாளர்கள் பலியானார்கள்.
பள்ளத்தில் மண் சரிந்து 6 இந்திய தொழிலாளர்கள் பலி - ஓமன் நாட்டில் பரிதாபம்
Published on

மஸ்கட்,

அரபு நாடான ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் சீப் என்ற இடத்தில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணி நடந்து வந்தது. பூமிக்கு அடியில் 14 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. இப்பணியில் இந்திய கட்டுமான தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பலத்த மழை பெய்தது. அதையடுத்து, பள்ளத்துக்கு மேலே குவிக்கப்பட்ட மண், பள்ளத்துக்குள் சரிந்தது. உள்ளே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மண் விழுந்து அமுக்கியது.

இதில், இந்திய தொழிலாளர்கள் உயிருடன் புதைந்தனர். 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

அவர்கள் எப்படி இறந்தனர் என்ற விவரம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், உள்ளூர் பத்திரிகைகள், அவர்கள் பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து இறந்ததாக செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையே, இந்த பரிதாப சம்பவம் குறித்து மஸ்கட் நகரில் உள்ள இந்திய தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மஸ்கட் நகரில் சீப் பகுதியில் கனமழையை தொடர்ந்து, இந்தியர்கள் என கருதப்படும் 6 தொழிலாளர்கள் பலியான தகவல் அறிந்து வேதனை அடைந்தோம். சம்பவம் குறித்த முழு விவரங்களை அறிய ஓமன் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம். 6 தொழிலாளர்களை பற்றிய விவரங்களை கேட்டுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com