

துபாய்,
கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு விமானத்தின் சரக்கு கிடங்கில் பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர்.
இதையடுத்து சிறிது நேரத்தில், துபாய் விமான நிலையத்தின் தீயணைப்புத்துறை விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது. டிசிஜிஏ இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துபாயிலிருந்து கோழிக்கோடு வருவதற்காக காத்திருந்த பயணி ஒருவர், "துபாய் விமான நிலையத்தில் 7 மணிநேரம் சிக்கித் தவிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டார். அதற்கு பதிலளித்த ஏர் இந்தியா, "IX344 துபாய்-கோழிக்கோடு விமானம் 11 டிசம்பர் அதிகாலை 1:45 மணிக்குப் புறப்படும்" என்று தெரிவித்தது.
பின்னர் "உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு வருந்துகிறோம். நீங்கள் ஓட்டலுக்கு மாற்றப்பட்டிருக்கிறீர்கள்" என்று பதிவிட்டது.