

வாஷிங்டன்,
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதளம் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. அந்த நிறுவனம் 7,500 கோடி டாலர் மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீட்டை அறிவித்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் ஆரம்ப விலை 135 அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.வர்த்தகத் தொடக்கத்திலேயே இப்பங்கின் மதிப்பு 21 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் சந்தை மூலதனம் 2.15 டிரில்லியன் டாலராக உயர்ந்தது. ஸ்பேஸ் எக்ஸ் பங்கு விலை அதிகரிப்பால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பும் வேகமாக உயர்ந்தது.
அந்த நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளைக் கொண்டுள்ள எலான் மஸ்க், உலக வரலாற்றிலேயே 1 டிரில்லியன் டாலர் ( கிட்டதட்ட ரூ.100 லட்சம் கோடி) சொத்து மதிப்பை எட்டிய முதல் டிரில்லியனர் என்ற சாதனையை படைத்தார்.இந்த பட்டியலிடலின் மூலம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் பொதுப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலேயே 6-வது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ரூ.100 லட்சம் கோடிக்கு மேல் சொத்து இருந்தாலும், மஸ்க்கின் வாழ்க்கை முறை வியக்கத்தக்க வகையில் மிகவும் எளிமையாகவே உள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போகா சிகா பகுதியில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'ஸ்டார்பேஸ்' ஏவுதளத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு சிறிய வீட்டில் அவர் வசித்து வருகிறார்.'பாக்ஸபிள்' என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்த இந்தச் சிறிய வீட்டை, அவர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார்.
இதில் ஒரு சிறிய வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை மற்றும் ஒரு குளியலறை மட்டுமே உள்ளன. ஆஸ்டின் நகருக்கு அருகே அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள் சில பெரிய வீடுகளைக் கொண்டிருந்தாலும், எலான் மஸ்க் தனது பெரும்பாலான நேரத்தை இந்த 400 சதுர அடி வீட்டிலேயே கழிக்கிறார். இந்த எளிய வீட்டை அவர் மிகவும் அற்புதமான இடம் என்று பலமுறை வர்ணித்துள்ளார்.