

மஹடிஷு,
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது.
மேலும், பொதுமக்கள், ராணுவத்தை குறிவைத்து அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனாக அப்துல்லா நடீர் செயல்பட்டு வந்தார். இந்த பயங்கரவாதியின் தலைக்கு அமெரிக்கா மற்றும் சோமாலியா அரசுகள் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சன்மானம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அல்ஷபா அமைப்பின் முக்கிய தலைவன் அப்துல்லாவை சோமாலிய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
அந்நாட்டின் ஜூபா மாகாணம் ஹரம்கா என்ற கிராமத்தில் பிற நட்பு நாடுகளின் படையுடன் இணைந்து சோமாலிய ராணுவம் கடந்த சனிக்கிழமை அதிரடி சோதனை நடத்தியது.
இந்த சோதனையின் போது பதுங்கி இருந்த அல்ஷபா முக்கிய தலைவன் அப்துல்லாவை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.