தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவின் 3வது அலை தொடக்கம் - சுகாதாரத்துறை தகவல்

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஜோகனஸ்பர்க்,

உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். இந்த சூழலில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவால் இதுவரை 17,30,106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 57,592 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நாட்டில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,100 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்துள்ளோம். ஆனால், தடுப்பூசி தட்டுப்பாடு நீடிப்பதால் நிலைமை கவலையளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்கா, மொராக்கோ, துனிசியா, எத்தியோபியா, எகிப்து ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com