"தமிழர்களின் நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்.." - இலங்கை அதிபர் உறுதி

அத்துமீறி மீன் பிடிக்க வரும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொழும்பு,

இலங்கையில் 9-வது அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகள் அடங்கிய தேசிய மக்கள் சக்தி முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றா. இதனைத்தொடர்ந்து இலங்கையின் 9-வது அதிபராக அனுரா குமார திசநாயகே பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவர் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் பொதுமக்களை நேற்று சந்தித்தார்.

இதன்படி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியஅவர், "அதிக தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதிக்கு சொந்தமான நீர்வளங்களை தமிழக மீனவர்கள் அழிக்கின்றனர். எங்கள் அரசாங்கம், நீர்வளங்களை தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும். அத்துமீறி மீன் பிடிக்க வரும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துவோம்.

போரினால் பாதிக்கப்பட்ட ஜாப்னா தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள், தங்களிடம் இருந்து பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்பதற்காகப் இன்றும் போராடி வருகின்றனர். இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்" என்று அனுரா குமார திசநாயகே கூறினார்.

இதனிடையே இலங்கைக்குச் சொந்தமான நீர்ப்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக ராமேசுவரத்தை சேர்ந்த 23 மீனவர்களை நேற்று இலங்கை கடற்படையினர் அத்துமீறி சிறைபிடித்தனர். அவர்கள் சென்ற 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சூழலில் இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே தமிழக மீனவர்கள் குறித்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com