

கொழும்பு,
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அன்னிய செலவாணி பற்றாக்குறையால் இலங்கை, கச்சா எண்ணெய் உள்பட பல முக்கிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், இலங்கை வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகிறது. விலை வாசி விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளதால், பொது மக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர்.
இலங்கையின் தற்போதைய சூழலுக்கு ஆளும் ராஜபக்சே குடும்பத்தினரே காரணம் எனக் கூறும் இலங்கை மக்கள் தலைநகர் கொழும்பு உள்பட பல இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, இலங்கையில் அனைத்துக்கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இலங்கையில் ஆளும் இலங்கை மக்கள் கட்சி (எஸ்.எல்.எல்.பி)யுடனான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் இன்று இலங்கைக்கான இந்திய தூதரை சந்தித்தனர்.
கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தூதர் கோபால் பாக்லேவை சிறிசேனா கட்சியை சேர்ந்த தயாசிஸ்ரீ ஜெயசேகரா உள்ளிட்டோர் சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தயாசிஸ்ரீ ஜெயசேகரா, இடைக்கால அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து விளக்குவதற்காக நாங்கள் இந்திய தூதரை சந்தித்தோம். இடைக்கால அரசு அமைப்பது என்பது அதிகாரத்தை பங்கீட்டு கொள்வதற்கான ஏற்பாடுகள் இல்லை. அதேவேளையில், பொருளாதார குழப்பத்தில் இருந்து நாட்டை ஏற்பாடு செய்வதற்கான முயற்சியாகும். பாராளுமன்ற உறுப்பினர்களாக எங்களுக்கு இந்த பொறுப்பு உள்ளது என்றார்.