

கொழும்பு,
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் தலீபான்களை இலங்கை அரசு அங்கீகரிக்கக் கூடாது என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து ரனில் விக்ரமசிங்கே கூறியதாவது;-
அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தாக்கிய அல்-கொய்தா பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்பட்டார்கள். அவர்களுக்கு தலீபான்கள் ஆதரவு கொடுத்தார்கள். இப்போது மீண்டும் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் சர்வதேச பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட வாய்ப்பு உள்ளது.
இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்படலாம். பயங்கரவாதிகளுக்கு இலங்கை ஒரு போதும் ஆதரவாக இருக்கக்கூடாது. அந்த வகையில் தலீபான்களுக்கு எதிரான நிலையை இலங்கை அரசு எடுக்க வேண்டும்.
முதல் கட்டமாக ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்தை வாபஸ் பெற வேண்டும். மேலும் தலிபான்களால் புத்த மதத்திற்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே அவர்கள் ஆட்சி காலத்தில் பாமியானில் உள்ள புத்தர் சிலைகளை அவர்கள் உடைத்தார்கள். அவர்கள் புத்த மதத்திற்கு எதிரானவர்கள். எனவே அவர்களை ஒருபோதும் இலங்கை அங்கீகரிக்கக் கூடாது என்றார்.