இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி, தற்காலிக நிறுத்தம்

இந்தியாவில் இருந்து தடுப்புமருந்து வருவதில் தாமதம் காரணமாக இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி, தற்காலிக நிறுத்தப்பட்டிருப்பதாக இலங்கை ஆரம்ப சுகாதார மந்திரி சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி, தற்காலிக நிறுத்தம்
Published on

கொழும்பு,

ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இந்திய அரசு இலவசமாக வழங்கிய 5 லட்சம் கோவிஷீல்டு டோஸ்களுடன், தடுப்பூசி போடும் பணியை கடந்த ஜனவரி இறுதியில் இலங்கை தொடங்கியது. நேற்று முன்தினம் வரை அங்கு சுமார் 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் அதிகமான தடுப்பூசிகளுக்கு இந்தியாவின் சீரம் நிறுவனத்துக்கு இலங்கை அரசு ஆர்டர் கொடுத்திருந்தது. ஆனால் சமீப சில வாரங்களாக தடுப்பூசி ஏற்றுமதியை சீரம் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

இவ்வாறு இந்தியாவில் இருந்து தடுப்புமருந்து வருவது தாமதமாகியுள்ள நிலையில், கைவசமுள்ள தடுப்பூசிகளை, முதல் டோஸ் போட்டவர்களுக்கு 2-வது டோஸ் போட பயன்படுத்த முடிவெடுத்து, தடுப்பூசி போடும் பணியை இலங்கை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. முதல் டோஸ் போட்ட 12 வாரங்களுக்குள் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பது நினைவில் கொள்ளத்தக்கது.

கடந்த புதன்கிழமை இரவு முதல், கொரோனா தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டிருப்பதாக இலங்கை ஆரம்ப சுகாதார மந்திரி சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அடுத்தகட்டமாக எப்போது இந்தியாவில் இருந்து தடுப்பூசிகள் வரும் என்ற எந்த உத்தரவாதமும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்த வாரம், சீனா தனது 6 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்கியுள்ளது. ஆனால் அதன் அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், தங்கள் நாட்டில் பணிபுரிந்துவரும் சீனர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படும் இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷியாவின் 7 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளுக்கும் இலங்கை ஆர்டர் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com