இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: சபாநாயகர் கரு. ஜெயசூர்யா அறிவிப்பு

அரசியல் குழப்பங்கள் நீடிக்கும் நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று கூட்டப்படும் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: சபாநாயகர் கரு. ஜெயசூர்யா அறிவிப்பு
Published on

கொழும்பு,

இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கேயுக்கும் இடையேயான பனிப்போரில் கடந்த மாதம் 26-ந் தேதி அதிரடி திருப்பம் ஏற்பட்டது. பிரதமர் பதவியில் இருந்து ரனிலை நீக்கியும், முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமர் பதவியில் அமர்த்தியும் சிறிசேனா உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.

ஆனால் நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பல தரப்பிலும் குரல் வலுத்தது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை 14-ந் தேதி (இன்று) கூட்டி சிறிசேனா அறிவிப்பு வெளியிட்டார். இருப்பினும் ராஜபக்சே குதிரைப்பேரம் நடத்தியும், பெரும்பான்மையை நிரூபிக்கத்தக்க அளவுக்கு தேவையான எம்.பி.க்கள் கிடைக்க வில்லை.

இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டார். நாடாளுமன்றத்துக்கு ஜனவரி 5-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை அறியாமல் பொதுத்தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியா குறிப்பிட்டார்.

இதற்கு மத்தியில் நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசியக்கட்சி உள்பட பல்வேறு தரப்பினரும் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை தொடுத்தனர். அந்த வழக்குகளில், தலைமை நீதிபதி நளின் பெரேரா தலைமையிலான அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணை தொடங்கியது. நேற்றும் விசாரணை நடந்தது.

இதன் முடிவில் நாடாளுமன்ற கலைப்புக்கு தடை விதித்து நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். வழக்குகளின் அடுத்த கட்ட விசாரணை, அடுத்த மாதம், 4, 5, 6 தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவித்தனர். இந்த உத்தரவு சிறிசேனாவுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூட்டப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார். பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூட உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, நாடாளுமன்றத்தை கூட்ட சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதிபர் சிறிசேனா கட்சியைச்சேர்ந்தவருமான விமல் ஸ்ரீபலா டி சில்வா, கூறும் போது, தங்கள் எம்.பிக்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றி இன்று முடிவு செய்வார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com