

கொழும்பு,
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருள், ஆடைகள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் சாமானிய, ஏழை மக்கள் அங்கு கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.
இதனிடையே சில நாட்களுக்கு முன்பு இலங்கை நிதி மந்திரி பாசில் ராஜபக்சே 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். அப்போது இலங்கை மக்களின் உணவு, மருத்துவ பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் கடன் உதவி வழங்குவதாக இந்திய அரசு உறுதியளித்தது.
இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்திய அரசு வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்து இலங்கை பிரதமர் ராஜபக்சே இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்காகவும், இந்திய அரசின் கடன் உதவிக்காவும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்காலத்திலும் இந்திய அரசாங்கம் இலங்கை விவகாரங்கள் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி தொர்பாக விசேஷ கவனம் செலுத்தும் என எதிர்பார்ப்பதாக ராஜபக்சே தெரிவித்துள்ளார்.