இலங்கையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதியோர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு

வயதானவர்கள் அதிகம்பேர் வசிக்கும் நாடாக இலங்கை மாறி வருவதாக மக்கள்தொகை கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொழும்பு,

தெற்காசியாவிலேயே மிக வேகமாக வயதானவர்கள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நாடாக இலங்கை மாறியுள்ளது. இலங்கையின் மக்கள் தொகை அமைப்பு வேகமாக மாறிவருவது குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. 2024-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்தான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி நாட்டின் மொத்த மக்கள்தொகை 2 கோடியே 17 லட்சத்து 81 ஆயிரத்து 800 ஆகும். இதில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 18 சதவீதம் ஆகும். இதன்மூலம் கடந்த 40 ஆண்டுகளில் அங்குள்ள முதியோர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. சிறந்த சுகாதார வசதிகளால் ஆயுட் காலம் அதிகரித்தது ஒருபுறம் இருந்தாலும், பிறப்பு விகிதம் குறைந்து வருவது மற்றும் இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்வதும் இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.

உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், எதிர்காலத்தில் நாட்டின் உற்பத்தித் திறன் மற்றும் முதியோர் பராமரிப்புச் செலவுகள் அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போக்கு நாட்டின் தொழிலாளர் சக்தி மற்றும் பொருளாதாரத் திட்டமிடலுக்கான நீண்டகால தாக்கங்களை குறிக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com