பிறப்புறுப்பு திருட்டு: சமூக ஊடகங்களில் பரவிய வதந்தி.. 80-க்கும் மேற்பட்டோர் அடித்து கொலை?

அக்டோபர் 2025 முதல் இந்த ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்புறுப்பு திருட்டு: சமூக ஊடகங்களில் பரவிய வதந்தி.. 80-க்கும் மேற்பட்டோர் அடித்து கொலை?
Published on

டோடோமா,

'பிறப்புறுப்பு திருட்டு' குறித்த பொய்யான வதந்திகளால் ஆப்ரிக்க நாடுகளில், 80க்கும் மேற்பட்டோர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கும்பல் தாக்குதல்

சமூக ஊடகங்களில் பரவிய "பிறப்புறுப்பு திருட்டு" (genital theft) என்ற விசித்திரமான வதந்திகள் தொடர்பான வன்முறையால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக குறைந்தது எட்டு ஆப்பிரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

டிக்டாக் (TikTok) மற்றும் பிற சமூக ஊடகத் தளங்கள் வழியாக பரவிய இந்தத் தவறான தகவல் உலகத் தலைவர்களின் கண்டனத்தைப் பெற்றிருந்தாலும், இத்தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. கும்பலால் இழுத்துச் செல்லப்படுதல், மக்கள் கெஞ்சிக் கொண்டிருக்கையில் கும்பல் தாக்குதல் நடத்துதல் அல்லது கல்லால் அடித்துக் கொல்லப்படுதல் போன்ற துயரமான காணொளிகள், பாதிக்கப்பட்ட சமூகங்களிலும் உயிர் பிழைத்தவர்களிடமும் ஆழமான வடுக்களை விட்டுச் சென்றுள்ளன.

பிறப்புறுப்பு திருட்டு

இந்த விவகாரம் குறித்து தனியார் செய்தி நிறுவனம் (BBC) மற்றும் அதன் 'உலகளாவிய தவறான தகவல் தடுப்புப் பிரிவு' (Global Disinformation Unit) ஆகியவை முதன்முதலில் செய்தி வெளியிட்டன. "பிறப்புறுப்பு திருட்டு" என்று அழைக்கப்படும் விவகாரம் தொடர்பான பொய்யான குற்றச்சாட்டுகளால், ஆறு நாடுகளில் அக்டோபர் 2025 முதல் இந்த ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொசாம்பிக்

அந்த அறிக்கையின்படி, காங்கோ நாட்டில் கடந்த ஆண்டு இந்த வதந்திகள் தொடங்கியதாக தெரிகிறது; அங்கு 2008-ஆம் ஆண்டிலேயே இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. பின்னர் இவை புருண்டி, ஜாம்பியா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளுக்கும், அத்துடன் மொசாம்பிக், அங்கோலா, மலாவி மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கும் பரவின.

இந்த வதந்தியின் கீழ் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மொசாம்பிக் உள்ளது. இங்கு மட்டும் ஆறு வாரங்களில் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கடந்த மே மாதம் போலீசார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் அரசு ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரியும் அடங்குவர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com