சீனாவில் புயல், கனமழை; 11 பேர் பலி

சீனாவில் புயல், கனமழைக்கு 11 பேர் பலியானார்கள்.
சீனாவில் புயல், கனமழை; 11 பேர் பலி
Published on

பீஜிங்,

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் நாந்தோங் நகரை நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.

புயலைத் தொடர்ந்து அங்கு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதில் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியதால் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனிடையே புயல், மழையை தொடர்ந்து நாந்தோங் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

புயல், மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 102 பேர் படுகாயமடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com